Join The Community

Wednesday, July 11, 2012

அரசியல் எனக்கு வேண்டாம்: நடிகர் சிவா மனம் திறந்த பேட்டி

அரசியல் எனக்கு வேண்டாம்: நடிகர் சிவா மனம் திறந்த பேட்டி
சென்னை 600028, கலகலப்பு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்த அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக சிவா கலந்து கொண்டார். அரங்கத்துக்குள் அவர் நுழைந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

சிவாவும் ரசிகர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் மேடை ஏறி பேசினார். “எல்லோருக்கும் வணக்கம். நான் உள்ளே நுழைந்ததும் என்னை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு பின்னால் ஐ லவ் யூ என்றொரு குரல் கேட்டது.

நானும் சந்தோசத்துடன் திரும்பி பார்த்தேன். ஆனால் ஐ லவ் யூ சொன்னது ஒரு பையன். அதை பார்த்தபோது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. பரவாயில்லை. சென்னை 600028 எனது முதல் படம். அந்த படத்தில் நடித்த எனக்கு கோவையில் விருது வழங்கினர். அதுவும் இந்த மண்டபத்தில்தான் வழங்கினர்.

இங்கு வந்த பின்னர்தான் அந்த நினைவு வந்தது. அன்று அந்த விருது பெற்றதுதான் இன்று என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறினார் சிவா. பின்னர் ரசிகர்கள் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு அசராமலும் முகம் சுளிக்காமலும் மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார். ஒரு சிலர் சிவாவை நடனமாடு மாறு கூறியபோது சினிமாவில் எனக்கு நடனம் சொல்லிக்கொடுத்து மாஸ்டருக்கே ஜுரம் வந்து விடும். எனவே டான்ஸ் வேண்டாம் என்றார்.

கோவையின் கால சூழ்நிலை பிடித்துள்ளதா? என்று கேட்ட போது, சென்னையை விட்டு வெளியே வந்து விட்டால் அத்தனை இடங்களிலும் நீங்கள் எப்போதும் போல சகஜமாக பேசுகிறீர்களே. மேடை பேச்சோடு ஒன்றி விட்டீர்களே எப்படி? என்று கேட்டபோது, ஒரு விசயத்தில் நாம் இறங்கி விட்டால் வேறு எதையும் பற்றி யோசிக்க கூடாது, அப்படி செய்வதால் எந்த இடத்தில் நின்றாலும் சகஜமாகி விடலாம் என்றார்.

காதல் தோல்வி ஏதும் உண்டா? என்ற போது சிரித்துக் கொண்டே நிறைய இருக்கிறது என்று கூறிய சிவா அதன் பின்னர் மேடையை விட்டு இறங்கி முன் வரிசையில் அமர்ந்து அழகிப்போட்டியை ரசித்தார். அழகிப்போட்டி முடிவு அறிவிப்புக்காக அவர் மீண்டும் மேடை ஏறியபோது அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து அறிவுரை கூறும் விதத்தில் பேசினார். அவர் கூறியதாவது:-

நான் பத்தாம் வகுப்பு பெயில். நான் இதை இங்கு சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இங்கு என்னுடன் படித்த நண்பர்கள் வந்திருக்கிறார்கள். நாங்கள் படித்த பள்ளியில் மாஸ்டர் என்னை பார்த்தால், “அதோ வருகிறான் பார். அவனும் அவன் மூஞ்சியை (முகத்தை)யும் பார். இவனெல்லாம் எங்கே உருப்படப்போறான்” என்பார். ஆனால் தற்போது சூட்டிங்குக்காக அந்த பள்ளிக்கு சென்றபோது அதே மாஸ்டர், எனக்கு அப்பவே தெரியும். நீ பெரிய ஆளா வருவேன்னு என்று கூறினார்.

நீங்கள் (போட்டியாளர்கள்) இங்கு உங்கள் திறமையை மேடையில் காண்பித்தபோது கீழே பாராட்டியவர்களும் உண்டு. கேலி செய்தவர்களும் உண்டு. ஆனால் அதை ஒரு உத்வேகமாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரசிகர்களாகிய அவர்கள்தான் நமக்கெல்லாம் முக்கியம். அவர்கள் இல்லா விட்டால் நாம் இல்லை. எனவே அவர்களது பாராட்டையும் கேலியையும் ஒரு மருந்தாக எடுத்துக் கொண்டு சாதித்து காட்ட வேண்டும்.

இவ்வாறு சிவா கூறினார்.

தொடர்ந்து சில ரசிகர்கள் காமெடித்தனமாக கேள்வி கேட்க அதற்கும் காமெடியாக பதில் அளித்தார் சிவா. நீங்கள் போட்டிருக்கும் கோட் வாங்கியதா? வாடகைக்கு எடுத்து வந்ததா? என்று ஒரு ரசிகர் கேட்க என்னப்பா இது கோவைக்கு வந்தால் போட்டிருக்கும் டிரெஸ் பில்லோடுதான் வர வேண்டும்போல தெரியுது என்றார் சிவா.

அரங்கத்துக்குள் நுழைந்ததும் நீங்கள் ஒரு பையன் ஐ லவ் யூ சொன்னதாக கூறினீர்களே. அப்படியானால் அவனா நீங்கள்? என்று இன்னொரு ரசிகர் கேட்க விசில் சத்தத்திலும் கை தட்டிலிலும் அரங்கமே அதிர்ந்தது. முடிவில் அழகிப் போட்டியில் முதல் இடம் பிடித்த சாதுரியுடனும், அழகன் போட்டியில் முதலிடம் பிடித்த கவுதமுடனும் மேடையில் ஒய்யாரமாக நடந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் நடிகர் சிவா.

0 comments:

Post a Comment